internet

img

ஃபேஸ்புக்கில் இருந்து பயங்கரவாதம் தொடர்பான 26 மில்லியன் பதிவுகள் நீக்கம்!

கடந்த 2 ஆண்டுகளில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான 26 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகையில், ”சமூக வலைதளங்களில் இயங்கிவரும் பயங்கரவாதக் குழுக்களின் 99 சதவீதம் பதிவுகள் நீக்கப்பட்டதுடன், கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதக் குழுக்கள் மட்டுமின்றி அந்த அமைப்புகளைப் பாராட்டும் அல்லது ஆதரிக்கும் நபர்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் பதிவுகளையும், கணக்குகளையும் அகற்றுவதற்கான பணிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் உதவியுடன் செய்து வருகிறோம்.

இவர்களின் கணக்குகளைத் தடை செய்வதற்கு பயங்கரவாத சித்தாந்தங்களை நாங்கள் அடிப்படையாகக் கொள்ளவில்லை. அவர்களின் நடத்தைகளை ரகசியமாக கண்காணிப்பதன் வழியே லட்சக்கணக்கான பயனர்கள் பயங்கரவாத முறைகளில் செயல்பட்டு வருவதைக் கண்டுபிடித்தோம். அவர்கள் ஃபேஸ்புக் சேவையின் வழியே செயல்படுவதை நாங்கள் தொடர்ந்து அனுமதிக்கவில்லை. உடனடியாக அவர்கள் கணக்குகள் முடக்கப்பட்டன. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.